Thursday, July 08, 2010

சொல்லாத காதல்...!!!


கால் நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...

யாரும் இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...
...
ஆள் இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...

புற நகர் பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...

கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...

பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...

செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...

பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...

உன் நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...

நீ போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...

தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...

இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...

சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ எனக்கில்லை என சுடும் அந்த நொடிகளை தவிர...!!!